திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.2 திருவலஞ்சுழி
பண் - இந்தளம்
விண்டெ லாமல ரவ்விரை நாறுதண் டேன்விம்மி
வண்டெ லாம்நசை யாலிசை பாடும் வலஞ்சுழித்
தொண்டெ லாம்பர வுஞ்சுடர் போலொளி யீர்சொலீர்
பண்டெ லாம்பலி தேர்ந்தொலி பாடல் பயின்றதே.
1
பாரல் வெண்குரு கும்பகு வாயன நாரையும்
வாரல் வெண்டிரை வாயிரை தேரும் வலஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்யொளி யீர்சொலீர்
ஊரல் வெண்டலை கொண்டுல கொக்கவு ழன்றதே.
2
கிண்ண வண்ணமல ருங்கிளர் தாமரைத் தாதளாய்
வண்ண நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவ லீர்சொலீர்
விண்ண வர்தொழ வெண்டலை யிற்பலி கொண்டதே.
3
கோடெ லாம்நிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடெ லாம்மலி நீர்மண நாறும் வலஞ்சுழிச்
சேடெ லாமுடை யீர்சிறு மான்மறி யீர்சொலீர்
நாடெ லாமறி யத்தலை யின்னற வேற்றதே.
4
கொல்லை வென்றபுனத் திற்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேலனம் வைகும் வலஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாளொளி யீர்சொலீர்
சில்லை வெண்டலை யிற்பலி கொண்டுழல் செல்வமே.
5
பூச நீர்பொழி யும்புனற் பொன்னியிற் பன்மலர்
வாச நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழித்
தேச நீர்திரு நீர்சிறு மான்மறி யீர்சொலீர்
ஏச வெண்டலை யிற்பலி கொள்வ திலாமையே.
6
கந்த மாமலர்ச் சந்தொடு காரகி லுந்தரீஇ
வந்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
அந்த நீர்முதல் நீர்நடு வாமடி கேள்சொலீர்
பந்த நீர்கரு தாதுல கிற்பலி கொள்வதே.
7
தேனுற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டினம்
வானுற் றநசை யாலிசை பாடும் வலஞ்சுழிக்
கானுற் றகளிற் றின்னுரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊனுற் றதலை கொண்டுல கொக்க வுழன்றதே.
8
தீர்த்த நீர்வந் திழிபுனற் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வாரிடர் தீர்க்கும் வலஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை யன்றடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்டலை யிற்பலி கொள்வதுஞ் சீர்மையே.
9
உரம னுஞ்சடை யீர்விடை யீரும தின்னருள்
வரம னும்பெற லாவதும் எந்தை வலஞ்சுழிப்
பிரம னுந்திரு மாலும் அளப்பரி யீர்சொலீர்
சிரமெ னுங்கல னிற்பலி வேண்டிய செல்வமே.
10
வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடி ஞானமென் னாவதும் எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.106 திருவலஞ்சுழி
பண் - நட்டராகம்
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே
    யிருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை
    முழுமணித் தளரங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
    வாணனை வாயாரப்
பன்னி யாதரித் தேத்தியும் பாடியும்
    வழிபடும் அதனாலே.
1
விண்டொ ழிந்தன நம்முடை வல்வினை
    விரிகடல் வருநஞ்சம்
உண்டி றைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
    இறைவனை உலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையோர் பங்கனை
    வலஞ்சுழி யிடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோ
    டினிதிருந் தமையாலே.
2
திருந்த லார்புரந் தீயெழச் செறுவன
    விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன பத்தியில் வருவன
    மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்து மாவன மந்திர மாவன
    வலஞ்சுழி யிடமாக
இருந்த நாயகன் இமையவ ரேத்திய
    இணையடித் தலந்தானே.
3
கறைகொள் கண்டத்தர் காய்கதிர் நிறத்தினர்
    அறத்திற முனிவர்க்கன்
றிறைவ ராலிடை நீழலி லிருந்துகந்
    தினிதருள் பெருமானார்
மறைக ளோதுவர் வருபுனல் வலஞ்சுழி
    யிடமகிழ்ந் தருங்கானத்
தறைக ழல்சிலம் பார்க்கநின் றாடிய
    அற்புதம் அறியோமே.
4
மண்ணர் நீரர்விண் காற்றின ராற்றலாம்
    எரியுரு வொருபாகம்
பெண்ண ராணெனத் தெரிவரு வடிவினர்
    பெருங்கடற் பவளம்போல்
வண்ண ராகிலும் வலஞ்சுழி பிரிகிலார்
    பரிபவர் மனம்புக்க
எண்ண ராகிலும் எனைப்பல இயம்புவர்
    இணையடி தொழுவாரே.
5
ஒருவ ராலுவ மிப்பதை யரியதோர்
    மேனியர் மடமாதர்
இருவ ராதரிப் பார்பல பூதமும்
    பேய்களும் அடையாளம்
அருவ ராததோர் வெண்டலை கைப்பிடித்
    தகந்தொறும் பலிக்கென்று
வருவ ரேலவர் வலஞ்சுழி யடிகளே
    வரிவளை கவர்ந்தாரே.
6
குன்றி யூர்குட மூக்கிடம் வலம்புரங்
    குலவிய நெய்த்தானம்
என்றிவ் வூர்களி லோமென்றும் இயம்புவர்
    இமையவர் பணிகேட்பார்
அன்றி யூர்தமக் குள்ளன அறிகிலோம்
    வலஞ்சுழி யரனார்பால்
சென்ற வூர்தனில் தலைப்பட லாமென்று
    சேயிழை தளர்வாமே.
7
குயிலின் நேர்மொழிக் கொடியிடை வெருவுறக்
    குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித் தெடுத்தவன் கதிர்முடி
    தோளிரு பதுமூன்றி
மயிலி னேரன சாயலோ டமர்ந்தவன்
    வலஞ்சுழி யெம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்
    அல்லவர் காணாரே.
8
அழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்
    அரவணைத் துயின்றானுங்
கழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்
    மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி
    வலங்கொடு பாதத்தால்
சுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு
    துன்பங்கள் களைவாரே.
9
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
    தவம்புரிந் தவஞ்செய்வார்
நெறிய லாதன கூறுவர் மற்றவை
    தேறன்மின் மாறாநீர்
மறியு லாந்திரைக் காவிரி வலஞ்சுழி
    மருவிய பெருமானைப்
பிறிவி லாதவர் பெறுகதி பேசிடில்
    அளவறுப் பொண்ணாதே.
10
மாதொர் கூறனை வலஞ்சுழி மருவிய
    மருந்தினை வயற்காழி
நாதன் வேதியன் ஞானசம் பந்தன்வாய்
    நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்திசை கற்றுவல் லார்சொலக்
    கேட்டுகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
    வருத்தம்வந் தடையாவே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com